ராமநாதபுரம், ஜன. 19:
முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசாரை, கழிப்பறைக்குள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ, கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை, நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ, முத்துப்பாண்டி (59), மணிநகர் சோதனை சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு, தஞ்சாவூரில் இருந்து வந்த பெண் போலீசாரும் பணியில் இருந்தனர்.
அப்போது, பெண் போலீஸ் ஒருவர், அங்குள்ள கழிப்பறையில் மொபைல் போன் இருப்பதை பார்த்துள்ளார்.
அதை எடுத்து பார்த்த போது, வீடியோ பதிவாகி கொண்டிருப்பது தெரிந்தது. அது, எஸ்.எஸ்.ஐ., முத்துப்பாண்டிக்கு சொந்தமானது என தெரிந்தது. மேலும், அதில் சில பெண் போலீசாரின் வீடியோ இருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார்.
அவரது புகாரில், பரமக்குடி போலீசார், முத்துப்பாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
![]()




