கள்ளக்குறிச்சி, டிச. 12:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில், அலுவலகக் கட்டுமான நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட நிறைவுப் பணிகள் மற்றும் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிறைவுப் பணிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.
![]()





