சென்னை, டிச. 19–
சென்னையில் நிலவிய பனிப் பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக படிப்படியாக பனிப் பொழிவு அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரெயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனிடையே டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் அடர் பனிமூட்டம் நிலவுவதால் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 7 விமானங்கள் இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் வாரணாசிக்குச் செல்லும் 4 விமானங்களும், சென்னைக்கு வருகை தரவிருந்த 3 விமானங்களும் ரத்தாகியுள்ளன. மேலும் 7 விமானங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரெயில்கள் மற்றும் விமானங்கள் தாமதம், ரத்து காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்
![]()





