செய்திகள்

கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

Makkal Kural Official

கடலூர், ஜன. 6:

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம், கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி பயிலவும், தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் 1,094 அரசு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 45,598 மாணவ, மாணவிகளுக்கும், 194 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 9,300 மாணவ, மாணவிகள் என 1,288 பள்ளிகளைச் சேர்ந்த 54,898 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் வட்டாரம் திருவந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்கள் 39 மற்றும் பெண்கள் 38 கூடுதல் 77 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஒரு மாணவருக்கு 50 கிராம் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் சேமியா கிச்சடியுடன் காய்கறி சாம்பார், புதன் கிழமைகளில் வெண் பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் அரிசி ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் கோதுமை ரவா கிச்சடியுடன் காய்கறி சாம்பார் ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு இருப்பு வைப்பறை, இருப்பு பதிவேடு, பெருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *