செய்திகள்

கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

Makkal Kural Official

கடலூர், டிச.29–

கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பசுந்தீவனம் தாதுஉப்புக் கலவையை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:–

கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு 100% கோமாரி தடுப்பூசி முகாம் கடலூர், நத்தப்பட்டு கிராமத்தில் துவங்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செயற்கை முறை கருவூட்டல், கன்று பரிசோதனை, சினைப் பரிசோதனை, மலட்டு தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் கோமாரி தடுப்பூசி போடும் பணிக்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கால் மற்றும் வாய் கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போர்க்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுகிறது.

இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். பொதுவாக இந்த நோய் குளிர் மற்றும் பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளில் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

ஆகவே இந்த நோய் கால்நடைகளுக்கு ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு டிசம்பர் 29ம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை எட்டாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி 3 லட்சம் கால்நடைகளுக்கு போடப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர்கள் தங்கள் பகுதியில் உள்ள முகாமில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மண்டல இணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் வேங்கடலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *