செய்திகள்

கடன் பிரச்சனையில் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை: விஷம் குடித்து தற்கொலை

Makkal Kural Official

நாமக்கல், ஆக. 5–

நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சனையால் தனது மூன்று மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி அடுத்துள்ள வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரிக் வண்டி மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி (26) இவர்களுக்கு பிரதிக்ஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), தேவ ஸ்ரீ (6) என்ற மூன்று மகள்களும் அனீஸ்வரன் (2) என்ற மகனும் உள்ளனர். மூன்று மகள்களும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா சென்ற கோவிந்தராஜ் ஒரு வாரத்திற்கு முன்புதான் வீட்டிற்கு வந்துள்ளார். கோவிந்தராஜ்க்கு வீடு கட்டிய வகையில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதியும் மகளிர் சங்கங்களில் கடன் பெற்றுள்ளார். வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் கடன் பிரச்னையை நினைத்து வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட பிறகு பாரதியும் அனீஸ்வரனும் படுக்கை அறையில் படுத்து கொண்டனர்.

அவர்கள் தூங்கிய பிறகு கோவிந்தராஜ் படுக்கையறை கதவை வெளியே தாள் போட்டுவிட்டு ஹாலில் படித்திருந்த தனது மூன்று குழந்தைகளையும் கொடுவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அதிகாலை கதவை திறக்க முயன்ற பாரதி வெளியே தாழ்ப்பாள் போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அறைக்குள் இருந்த குத்து விளக்கை எடுத்து கதவை உடைத்து வெளியே வந்து பார்த்தார். அங்கு குழந்தைகள் மூன்றும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மேலும் அருகில் கோவிந்தராஜ் இறந்து கிடந்தார். அதைப் பார்த்து கதறி அழுத பாரதி தனது உறவினர்களிடம் நடந்ததை கூறினார் தகவல் கிடைத்ததும் மங்களபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நாமக்கல் எஸ்பி விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 3 மகள்களை கொன்று ரிக் மேனேஜர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *