மக்கள் குரல் பார்வையில்

ஒரு கண்டுபிடிப்பு… ௹ ஒரு லட்சத்தை தாண்டிய பங்கு… டிசம்பர் 29 ஒரு வரலாறு

Makkal Kural Official

1990ஆம் ஆண்டு பங்குச்சந்தையில் ரூ.332 என்ற விலையில் பரிமாறப்பட்ட எம்.ஆர்.எப் (MRF) பங்கு, 2000 ஆம் ஆண்டில் ரூ.2,820 ஆக உயர்ந்தது. இந்தியாவின் வாகன மற்றும் வர்த்தக வாகனத் துறை விரிவடைந்த 2010 களில் இந்த பங்கின் வளர்ச்சி வேகம் பெற்றது. 2020ஆம் ஆண்டில் ரூ.70,964 என்ற அளவுக்கு சென்ற எம்.ஆர்.எப் பங்கு, 2021ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்தைத் தாண்டி, இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் அந்த சாதனையை நிகழ்த்திய முதல் பங்காக மாறியது.

இந்த அபாரமான உயர்வுக்கு காரணமாக, டயர் துறையில் எம்.ஆர்.எப் நிறுவனம் பெற்ற ஆதிக்கமும், அதன் நீண்டகால நம்பகத்தன்மையும் குறிப்பிடத்தக்கவை. ஆனால், இந்த வெற்றிப் பயணத்தின் பின்னணியில் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய அறிவியல் கண்டுபிடிப்பும் மறைந்திருக்கிறது.

அரிய கண்டுபிடிப்பு:

அந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் சார்ல்ஸ் கூட்இயர். 1800 டிசம்பர் 29 அன்று கனெக்டிகட் மாநிலம் நியூ ஹேவனில் பிறந்த அவர், ரப்பரின் தன்மையை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆண்டுகள் முழுவதும் பரிசோதனைகள் செய்தார். 1839 ஆம் ஆண்டு, இயற்கை ரப்பரை சல்பருடன் சூடாக்கிய போது அது வலுவாகவும், நெகிழ்வாகவும், வெப்பத்தையும் ரசாயனங்களையும் தாங்கும் தன்மை கொண்டதாக மாறியது. இதுவே பின்னர் ‘வல்கனைசேஷன்’ என அழைக்கப்பட்ட முக்கிய கண்டுபிடிப்பாக அமைந்தது.

வல்கனைசேஷன் ரப்பரின் ஆயுளை நீட்டித்து, டயர்கள் உள்ளிட்ட பல தொழில்துறை பயன்பாடுகளுக்கு அடித்தளம் அமைத்தது. ஆனால், இத்தனை பெரிய தொழில்துறை புரட்சிக்கு வழிவகுத்த சார்ல்ஸ் கூட்இயர், காப்புரிமை வழக்குகளாலும் நிதிச் சிரமங்களாலும் பாதிக்கப்பட்டு, 1860ஆம் ஆண்டு வறுமையிலேயே உயிர்நீத்தார்.

இன்று உலகம் முழுவதும் பல லட்சம் கோடிக்கணக்கான வாகனங்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்க, இந்தியாவில் எம்.ஆர்.எப் போன்ற நிறுவனங்கள் பங்குச்சந்தை சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வெற்றிக் கதையின் வேர்களில், ஒரே மனிதனின் தளராத முயற்சியும், ஒரு சிறிய அறிவியல் கண்டுபிடிப்பும் இருப்பது, வரலாற்றின் சுவாரசியமான வினோதம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *