மெல்போர்ன், ஜூலை 10–
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களான ஈ.கோலியை அழிக்கும் ஒரு செயற்கைப் புரதத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மெல்போர்னைச் சேர்ந்த மோனாஷ் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஏ.ஐ.யைப் பயன்படுத்தி ஒரு பயன்படுத்தக்கூடிய உயிரியல் புரதத்தை ஆஸ்திரேலியக் குழு உருவாக்கியது இதுவே முதல் முறை. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இணைந்து, விரைவான, குறைந்த செலவிலான மருந்து உருவாக்கம் மற்றும் நோயறிதலுக்காக ஆயிரக்கணக்கான புரதங்களை உருவாக்கும் திறனை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆய்வுக்காக, ஏ.ஐ. புரோட்டீன் டிசைன் பிளாட்ஃபார்ம் (AI Protein Design Platform) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மருந்து மற்றும் நோயறிதல் பயன்பாடுகளுக்காக விரைவாகத் தனிப்பயனாக்கப்பட்ட புரதங்களை உருவாக்க, மேம்பட்ட ஏ.ஐ-இயக்கப்படும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புதிய கண்டுபிடிப்பு
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் மற்றும் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி மாணவர் டேனியல் ஃபாக்ஸ் கூறுகையில், “இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட இலக்குடன் பிணைக்கக்கூடிய புரதங்களை உருவாக்க முடியும். இது நோய்த்தொற்றுகள், புற்றுநோய், பாம்புக்கடி மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைகளை விரைவுபடுத்தும்” என்றார்.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, ஏ.ஐ. புரத பொறியியலை பல தசாப்தங்களில் இருந்து நொடிகளுக்குக் குறைத்துள்ளது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
மோனாஷ் பல்கலைக்கழகத்தின் இணை முதன்மை ஆசிரியரான ரைஸ் கிரின்டர் கூறுகையில், “அமெரிக்க உயிர் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்ற டேவிட் பேக்கரின் முன்னோடிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்திரேலிய பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட முற்றிலும் புதிய புரதங்களை உருவாக்க உதவுகிறது” என்றார்.
இந்தக் கண்டுபிடிப்பு மருந்து ஆராய்ச்சியை விரைவுபடுத்தி, செலவுகளைக் குறைத்து, ஆண்டிபயாடிக் எதிர்ப்புக்குப் புதிய தீர்வுகளை வழங்கும் என்று கிரின்டர் நம்பிக்கை தெரிவித்தார்.
![]()





