செய்திகள்

ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

Makkal Kural Official

புதுடெல்லி, டிச.26-

புதிய வருமானவரி சட்டம், ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. அதன்படி, ரூ.12 லட்சம்வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.

தற்போதைய வருமானவரி சட்டம், கடந்த 1961-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், பல்வேறு சட்டப்பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்து வதற்காகவும் இந்த ஆண்டு புதிய வருமானவரி மசோதா-2025, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதா, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

இந்நிலையில், புதிய வருமானவரி சட்டம்-–2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது. 64 ஆண்டு கால பழமையான வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக இச்சட்டம் அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி, வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது.

இதனால், வருமானம் ஈட்டும் தனிநபர்களின் கைகளில் அதிக பணம் புழங்கும். அவர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்குவதால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மேலும், புதிய வருமானவரி சட்டத்தின் ஒரு அங்கமாக, ஜி.எஸ்.டி. வரி அடுக்குகள் 4-க்கு பதிலாக 2 ஆக குறைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி இது அமலுக்கு வந்தது. 375 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டது.

அதே சமயத்தில், பான்மசாலா, புகையிலை பொருட்கள், சிகரெட் மீது ஜி.எஸ்.டி.யுடன் கூடுதல் கலால் வரி விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள், மத்திய அரசு முடிவு செய்யும் தேதியில் அமலுக்கு வரும். அடுத்தகட்டமாக சுங்க வரிகளை எளிமைப்படுத்த உள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *