புதுடெல்லி, ஜூலை 29–
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடின. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் பிற மாநிலங்களில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் புகார் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.இதை ஏற்க மறுத்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், திட்டமிட்டபடி அவை அலுவல்கள் நடைபெறும் என்றும் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை பகல் 2 மணிக்கு ஹரிவன்ஷ் ஒத்திவைத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மாநிலங்களவையில் இன்று தொடங்கும் விவாதத்துக்கு 16 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுமக்களவையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பேசினார்கள். இந்த நிலையில் அவை கூடியதும், இன்று மக்களவை அலுவல்கள் வழக்கம்போல் நடைபெற்றன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
இதனிடையே மக்களவையில் இன்று மாலை ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு கேள்விகளை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()





