செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

Makkal Kural Official

டெல்லி, ஆக.8-–

எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 21ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது.

ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இன்று காலை மாநிலங்களவை அவை கூடியதும் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்க கோரினர்.

12 மணி வரை ஒத்திவைப்பு

திருணாமூல் காங்கிரஸ் டெரிக் ஓபரேன், விவாதம் நடத்த அனுமதி மறுப்பதால் ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாக தெரிவித்தார். சி.பி.எம். உறுப்பினர் ஜான் பிரிட்டோ 267 விதிமுறைப் படி தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்படுவதால் அந்த பிரிவையே ரத்து செய்யலாம் என்று தெரிவித்தார். மேலும் திமுக எம்பி திருச்சி சிவா பேசும் போது, என்ன காரணங்களால் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பான விவாத கோரிக்கைகள் மறுக்கபட்டதால் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் மக்களவையும் எதிர்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *