நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது
புதுடெல்லி, ஆக.20-
டெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து, முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்கள்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025–26ம் நிதியாண்டில், நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.350 கோடி நிதியையும் விரைந்து வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியுடன் இணைந்து, டெல்லியில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, அக்கடிதத்தை வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியை வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()




