சென்னை, ஜூலை 9–
‘‘நீதிமன்றங்களிலும் சமூக நீதிக்கான கதவு திறந்தது’’ என்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு மற்றும் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கத்தின் தலைவர் டி.பி. நோவா யவனராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘மக்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள் போன்றவைகளின் ஓயாத குரல்களே பல வாசல்களை திறந்து இருக்கின்றன. அந்த அடிப்படையில் தான், நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் சமூக நீதி ஏற்கப்பட்டது. அதன் வாயிலாக சில நியமனங்களும் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். தலைமை நீதிபதியின் இந்த துணிச்சலான நடவடிக்கையை தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு வரவேற்கிறது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்–ன் இந்த முடிவால், உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் தொடங்கி நீதிபதி சேம்பர் பணியாளர்கள் வரை எஸ்.சி. பிரிவினர் 15% இட ஒதுக்கீட்டையும் எஸ்.டி.பிரிவினர் 7.5% இட ஒதுக்கீட்டு பயனை பெறுவார்கள்.
காலத்திற்கு ஏற்ப மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க மாற்றங்கள் ஒரு நாட்டின் அத்தனை அமைப்புகளிலும் நிகழ வேண்டும். அல்லது நிகழ்த்தப்பட வேண்டும்.
அது தான் ஜனநாயகத்திற்கான வெற்றி. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த இட ஒதுக்கீட்டு நடவடிக்கை, அந்த மாற்றங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையே உறுதி செய்துள்ளது’’.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
![]()





