செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரசார கூட்டம்: தவெக தொண்டர்கள் திரண்டதால் பரபர

Makkal Kural Official

ஈரோடு: டிசம்பர் 18

கொங்கு மண்டலத்தில் முதல்முறையாக நடைபெறும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இன்று (டிசம்பர் 18) நடைபெறும் இந்தப் பிரசார கூட்டம் தவெக வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை 9.30 மணிக்கு விஜய் கோவைக்கு வருகிறார். சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் அவர் அங்கு சுமார் அரை மணி நேரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் தலைமையில் பலர் தவெகவில் இணைய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவெக அரசியல் வளர்ச்சியில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு விஜய் ஈரோடு மாவட்டத்துக்கு புறப்படுகிறார். விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்ற உள்ளார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் காலை 8 மணி முதல் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தொண்டர்கள் முன்கூட்டியே குவிந்ததால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னதாகவே அனுமதி வழங்கினர். முதல் வரிசையில் இடம்பிடிக்க தொண்டர்கள் முண்டியடித்ததால் சில நேரங்களில் பதற்றம் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்கும் நோக்கிலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விஜயின் இந்த ஈரோடு மக்கள் சந்திப்பு, தவெக அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *