சென்னை, ஜன. 21–
தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, அவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மேலும், அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
காரைநகர் கடற்படை முகாமுக்கு மீனவர்களை அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது அவர்களது குடும்பத்தினரையும், மீனவ மக்களையும் மிகுந்த சோகம் அடைய செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()





