சென்னை, ஜூலை.2-
சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-–
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.கடந்த 2 நாட்களில் மட்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது, இது 2-வது சம்பவம் ஆகும்.
பருவகால மீன்பிடி தடைக்கு பிறகு சமீபத்தில் தான் மீன்பிடி தொழிலை மீனவர்கள் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே 48 தமிழக மீனவர்கள் இலங்கை காவலில் உள்ள நிலையில், இத்தகைய தொடர் கைது நடவடிக்கைகள் மீனவ சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வருகிறது.
எனவே, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





