நியூயார்க், ஜூலை 11–
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஜூலை 14 ந்தேதி பூமி திரும்புகிறார் என நாசா தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக விண்வெளி திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிட்ச் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜூன் 25 அன்று புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆக்சியம்-4 பயணம் தொடங்கியது. 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, ஜூன் 26 அன்று ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலம் ஐஎஸ்எஸ்–இல் இணைந்தது. சுபான்ஷு சுக்லா, மிஷன் தலைவர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் டிபோர் கபு ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். இவர்கள் 230 முறை பூமியைச் சுற்றி, சுமார் 100 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.
14 நாள் பயணம் ரத்து
இந்தியாவின் இரண்டாவது விண்வெளி வீரரும், ஐஎஸ்எஸ்-ஐ அடைந்த முதல் இந்தியருமான சுபான்ஷு சுக்லா, 14 நாள் பயணத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) வடிவமைத்த 7 மைக்ரோகிராவிட்டி ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள், தாவர உயிரியல், தசை ஆரோக்கியம் மற்றும் மைக்ரோபயாலஜி ஆகியவற்றை உள்ளடக்கியவை. மேலும், நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து 5 அறிவியல் ஆய்வுகளையும் நடத்தினர்.
குழு, சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை முடித்து, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களித்துள்ளது. ஜூலை 14 அன்று, டிராகன் விண்கலம் ஐஎஸ்எஸ் இலிருந்து பிரிந்து பூமிக்கு திரும்பும், மேலும் குழுவினரை உற்சாகமாக வரவேற்க நாசா ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணம், இந்தியாவின் ககன்யான் மனித விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான அனுபவத்தை வழங்கியுள்ளது.
![]()





