செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: டிரம்ப் மீண்டும் பேச்சு

Makkal Kural Official

வாஷிங்டன், நவ. 22:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நியூயார்க் நகரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி நேற்று வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் (ஓவல் ஆபீஸ்) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் இடையில் 8 அமைதி ஒப்பந்தங்களை நான் கொண்டு வந்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அதிபர் டிரம்ப் கடந்த நவம்பர் 19ம் தேதி கூறுகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது மோதல்களை நிறுத்தவில்லை என்றால், இருநாடுகள் மீதும் 350 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததாகவும். அதையடுத்து, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து போருக்குச் செல்லவில்லை என உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளினால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல்கள் தொடங்கின. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அதிபர் டிரம்ப் கடந்த மே 10ம் தேதி அறிவித்தார்.அதன்பின்னர் இதுவரை 60 முறைக்கும் மேல் இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியுள்ளேன் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்தப் போர் நிறுத்தத்தில் 3ம் நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *