நிர்வாக இயக்குனர் பினோத்குமார் தகவல்
சென்னை, ஜன. 23–
கடந்த நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3வது காலாண்டில், இந்தியன் வங்கி ரூ.3,061 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது என்று நிர்வாக இயக்குனர் பினோத்குமார் தெரிவித்தார்.
கடந்த 2024–-25 நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.2,852 கோடியைவிட இது 7.33% அதிகரிமாகும். வங்கி வெளியிட்ட நிதிநிலை முடிவுகளின்படி, வங்கியின் நிகர வட்டி வருவாய் 7.50% அதிகரித்து ரூ.6,896 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.6,415 கோடியாக இருந்தது. வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.17,912 கோடியிலிருந்து உயர்ந்து, தற்போது ரூ.19,663 கோடியை எட்டியுள்ளது.
குறைந்த வாராக்கடன்:
வங்கியின் வாராக்கடன் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் 3.26% இருந்து தற்போது 2.23%ஆகக் குறைந்துள்ளது. பண மதிப்பில், முந்தைய ஆண்டில் ரூ.18,208 கோடியாக இருந்த வாராக்கடன், தற்போது ரூ.14,268 கோடியாக சரிந்துள்ளது.
டெபாசிட் வளர்ச்சி:
வங்கியின் மொத்த டெபாசிட் தொகை 12.62% வளர்ச்சி கண்டு ரூ.7,90,923 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.7,02,282 கோடியாக இருந்தது. மேலும், வங்கி எதிர்கால இழப்புகளை ஈடுகட்ட ஒதுக்கும் நிதி ரூ.1,059 கோடியிலிருந்து ரூ.857 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த வங்கிக்கு உலக அளவில் 13 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர் உரிமைத்தொகை அட்டைகளை வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
![]()





