வேலூர், ஜன. 3:
கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார்.
முதலமைச்சர் அறிவித்த கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கல்லூரி கட்டுவதற்கான புதிய இடத்தினை வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயர அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். கல்வி மற்றும் சுகாதாரம் இரண்டும், இரண்டு கண்கள் போல என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குறிக்கோளாகும். கல்வி ஒன்றே ஒரு மனிதனை முன்னேற்றுவதற்கான மிகச்சிறந்த ஆயுதமாகும். வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்து புதிய இடத்தில் கல்லூரி கட்டடப்படவுள்ளது. நான்முதல்வன், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. முதலமைச்சர் இந்த ஆண்டே கல்லூரி தொடங்கி வைக்கப்பட்டு, இந்த ஆண்டே கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டப்படவுள்ளது. இக்கல்லூரியில் மேலும் சில பாடப்பிரிவுகள் இடம்பெற செய்து மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் அ.மலர், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, கீ.வ.குப்பம் ஒன்றியக்குழுத்தலைவர் லோ.ரவிசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
![]()





