அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு
வாஷிங்டன், ஜூலை 1–
மானியங்கள் இல்லாவிட்டால், எலான் மஸ்க் தனது தொழில்களை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்பச் சென்றிருப்பார்” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக தாக்கி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அரசின் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இல்லையென்றால், எலான் மஸ்க் தனது சொந்த நாடான தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பச் சென்றிருப்பார் என டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மை காலமாக டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கிற்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த மஸ்க், தற்போது அவரது நிர்வாகத்தின் சில கொள்கைகளை விமர்சித்து வருகிறார். குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான சலுகைகளை குறைக்கும் வகையிலான புதிய வரி மசோதாவை மஸ்க் கடுமையாக எதிர்த்தார்.
மஸ்க் மீது டிரம்ப் தாக்கு
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். “எலான் மஸ்க் வரலாற்றில் வேறு எந்த மனிதரையும் விட அதிக மானியங்களைப் பெற்றிருக்கலாம். இந்த மானியங்கள் இல்லாவிட்டால், எலான் தனது தொழில்களை மூடிவிட்டு தென் ஆப்ரிக்காவுக்குத் திரும்பச் சென்றிருப்பார்” என்று டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் தனது நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுக்கு அமெரிக்க அரசிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரனுக்கு ராக்கெட் ஏவுவதற்கான ஒப்பந்தங்கள் முதல் மின்சார வாகனங்களுக்கான ஊக்கத்தொகைகள் வரை பல்வேறு அரசு திட்டங்களால் மஸ்கின் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.
டிரம்ப் இதற்கு முன்னரும் மஸ்கின் நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசு மானியங்கள் குறித்து விமர்சித்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு, “அரசு மானியங்கள் இல்லாவிட்டால் மஸ்க் ‘மதிப்பற்றவர்’ ஆகிவிடுவார்” என்று டிரம்ப் கூறியிருந்தார். அப்போது, மஸ்க் டிரம்பின் அடுத்த அதிபர் பதவிக்காலத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இரண்டு பெரும் புள்ளிகளுக்கு இடையேயான இந்த வார்த்தைப்போர் அமெரிக்க அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]()





