புதுடெல்லி, டிச. 6–
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மகாபரிநிர்வான் திவாஸ் என்ற பெயரில் நடைபெறுகிறது.
இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:–
‘‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம். அவரது தொலைநோக்கு தலைமைத்துவமும் நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றது. மனித கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை ஊக்குவித்தவர். ஒரு வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்” என கூறியுள்ளார்.
ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– சமத்துவம், நீதி மற்றும் கண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் உருவாக்கிய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான எனது உறுதியை வலுப்படுத்துகிறது. மேலும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவுக்கான கூட்டுப் போராட்டத்தை இந்த நாள் ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]()





