புதுடெல்லி, ஆக. 18–
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீட் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை ஐ. பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், அடுத்த 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பதில் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
![]()





