பெய்ஜிங், ஆக. 22–
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அமெரிக்காவிடம் இருந்து பல்வேறு அழுத்தங்கள், தடைகள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தையின்படி இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5% தள்ளுபடியில் தொடரும் என ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீனாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங் கூறுகையில், “அமெரிக்கா சுதந்திர வர்த்தகத்தால் பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிடம் இருந்து வர்த்தகத்தைப் பெற வரியின் மூலமாக பேரம் பேசுகிறது. இந்தியாவின் மீது அமெரிக்கா 50% வரை வரிகளை விதித்து அச்சுறுத்தியுள்ளது. சீனா இதை உறுதியாக எதிர்க்கிறது. இதுபோன்ற செயல்களை எதிர்கொள்ளும்போது மவுனம், கொடுமைப்படுத்துபவருக்கு தைரியத்தை தருவதாக இருக்கிறது. உலக வர்த்தகத்துடன் பல்வேறு வர்த்தக அமைப்புகளை நிலைநிறுத்த இந்தியாவுடன் சீனா உறுதியாக நிற்கும். இந்தியாவும் சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். இந்தியாவின் பக்கம் சீனா நிற்கும், நியாயத்துக்கு விரோதமான வரி விதிப்பு முறைகளை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக போரை மேற்கொண்டதால் இந்தியாவுடன் ரஷ்யா, சீனா நாடுகளின் உறவுகள் மேம்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடியும் 2018க்குப் பிறகு அடுத்த வாரம் பெய்ஜிங்கிற்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()





