செய்திகள்

அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்க புதிய கொள்கை உருவாக்குங்கள்

Makkal Kural Official

சென்னை, ஆக.31-

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத சுங்கவரி ஆகஸ்ட் 27, 2025 அன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. உற்பத்தி மற்றும் மென்பொருள் துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, அமெரிக்காவைத் தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகக் கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில், தமிழ்நாட்டின் பொருள்கள் ஏற்றுமதியில் 31 சதவீதம் அமெரிக்காவிற்கே சென்றது; இந்தியா முழுவதும் அது 20 சதவீதம் மட்டுமே. எனவே, அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தமிழ்நாட்டை அதிகம் பாதிக்கிறது.

அமெரிக்க அரசின் இந்த வரி உயர்வு போல் முன்பு எப்போதும் ஏற்பட்டதில்லை; இதனால் அனைத்துத் துறைகளின் ஏற்றுமதி யாளர்களிடமும் அச்சம் நிலவுகிறது. கடும் சுங்கவரி உயர்வுகள் ஏற்கனவே பெறப்பட்ட பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட காரணமாகியுள்ளன. இந்த உயர்வுகள் எங்கள் தயாரிப்புகளை உலகளவில் போட்டியிட முடியாதவையாக மாற்றியுள்ளன.

இந்தக் கடின சூழ்நிலையில் ஒன்றிய அரசின் பதில் நடவடிக்கை போதுமானதாக இல்லை. தமிழ்நாடு அரசு தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருந்தாலும், ஒரு மாநில அரசால் செய்யக் கூடியவற்றுக்கு வரம்புகள் உள்ளன. எனவே, ஒன்றிய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாகத் துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். அதிகம் பாதிக்கப்படுபவை துணிநூல், இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொழில் துறைகளே. இந்தத் துறைகளில் வேலை இழப்பு 13 சதவீதத்திலிருந்து 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் துணிநூல் ஏற்றுமதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 28 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டின் துணிநூல் துறை கோடிக்கணக்கான குடும்பங்களைப் பாதுகாக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், துணிநூல் தொழிலாளர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள்; பல பத்தாண்டுகளாக மக்கள் வாழ்க்கையை மாற்றிய சமூக-பொருளாதாரச் சூழல் இது. திருப்பூரே கடந்த ஆண்டு சுமார் ரூ.40,000 கோடி வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டியது. ஏற்றுமதியைத் தாண்டி, இந்தத் துறை நிறைய துணைத் தொழில்களை உருவாக்குகிறது

அமெரிக்கச் சுங்க வரிகள் துணிநூல் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் கவலைக்கிடமானது. 50 சதவீத சுங்கவரியில், இந்தத் துறையின் சாத்தியமான இழப்பு ஏறத்தாழ 1.62 பில்லியன் டாலர் வரை இருக்கும் என எங்கள் மதிப்பீடுகள் காட்டுகின்றன, மேலும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வர்களின் வேலைகள் உடனடியாக ஆபத்தில் உள்ளன.

ஆகஸ்ட் 16 அன்று, உடனடி உதவி கோரி, நான் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அமெரிக்காவுடன் இணைந்தே, இந்தியா தனது தூதரக வழிகளைப் பயன்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து ஆப்பிரிக்கா ஆகியவற்றுடன் உறவுகளை ஆழப்படுத்த வேண்டும்; அங்கு எங்கள் தொழிலாளர் வலிமை, உற்பத்தி அளவு மற்றும் விதிமுறைகள் பின்பற்றுதல் ஆகியவை குறைந்த அல்லது பூஜ்ய சுங்கவரி அணுகலைப் பெற உதவுகின்றன. இந்த நோக்கத்திற்காக நான் விரைவில் ஐரோப்பாவுக்கு வர்த்தக மேம்பாட்டுப் பயணம் செல்ல மேற்கொள்ளவிருக்கிறேன்.

பருத்தி இறக்குமதி

சுங்கவரி நிறுத்தம்

பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தின் பயனாக, பருத்தி இறக்குமதியில் 11 சதவீத சுங்கவரியை டிசம்பர் 31 வரை நிறுத்திய ஒன்றிய அரசின் முடிவை நான் பாராட்டு கிறேன். இந்தத் தற்காலிக இடைநீக்கம் உள்நாட்டுப் பருத்தி விலையை நிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது மேலும் அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள கவலைகளைத் தீர்ப்பதாக உள்ளது. ஆனால், இது தற்காலிகமானது தான். அமெரிக்கா உயர்த்தியுள்ள சுங்கவரிகள் நீக்கப்படவில்லை யெனில் அல்லது பிற சலுகைகளால் சமன்படுத்தப்படவில்லையெனில், இந்த நிவாரணம் தற்காலிகமானதாக வே இருக்கும்.

ஆனால், தமிழ்நாடு, வெளிப்புற உதவிகளுக்காக காத்திருக்கவில்லை. எங்கள் அரசு அண்மையில் புதிய துணிநூல் சாயம் தோய்த்தல் அலகுகளை பூஜ்ய திரவ வெளியேற்றம் அடிப்படையிலான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் அமைக்கவும், ஏற்கனவே உள்ள சாயப்பட்டறை அலகுகளை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் மூலதன முதலீட்டு மானியத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் நிலை பெறத்தக்க நடைமுறைகளை ஏற்க, மாசுபாட்டைக் குறைக்க, சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கிறது.

தமிழ்நாடு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது, தொழில் துறையுடன் இணைந்து திறன் பயிற்சியை வலுப்படுத்தியுள்ளது, சமூகப் பாதுகாப்புக் காப்பீட்டை விரிவுபடுத்தியுள்ளது. திறமையான மற்றும் ஊக்கமளிக்கப்பட்ட மக்களிடம் தான் எங்கள் போட்டியின் வலிமை அடங்கியுள்ளது என்பதை நாமறிய வேண்டும்; அவர்கள் தரமான உற்பத்தியைப் பெருமளவில் வழங்க முடியும். ஆனால், ஒரு மாநில அரசால் செய்யக்கூடியவை வரம்புக்கு உட்பட்டவை. சர்வதேசப் பேச்சுவார்த்தைகள், சுங்கவரிக் கொள்கை, மாபெரும் பொருளாதார ஆதரவு போன்ற துறைகளில் ஒன்றிய அரசின் முன்முயற்சிகளும் ஆதரவும் இன்றியமையாதவை. தமிழ்நாடு தனது ஏற்றுமதிகளைப் பாதுகாக்கவும், தனது தொழிலாளர்களை வேலை இழப்பிலிருந்து காப்பாற்றவும் ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது. ஒன்றிணைந்து செயல்பட்டால், ஒரு சிக்கலான தருணத்தை மாற்றத்திற்கான வாய்ப்பாக மாற்ற முடியும்; இதற்காக ஒன்றிய அரசு தீவிரமாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

மக்களின் எதிர்காலம்

எதிர்வரும் நெருக்கடி சுங்க வரிகளையும் வர்த்தக ஒப்பந்தங்களையும் பற்றியது மட்டும் அல்ல; இது எங்கள் மக்களுக்கு எப்படியான எதிர்காலம் வேண்டும் என்பதற்கான கேள்வி. நாங்கள் பின்வாங்கி, பிற இறக்குமதிகள் எங்கள் தயாரிப்புகளை மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டுமா, அல்லது நாங்கள் புதுமை செய்யவோ, மேம்படுத்தவோ, சமமான வர்த்தகத்திற்காகவோ போராட வேண்டுமா? தற்காலிக புவிசார் அரசியல் பதட்டங்கள் பல பத்தாண்டுகளாக நடந்த உழைப்பைப் பாழாக்க அனுமதிக்க வேண்டுமா, அல்லது இந்த நெருக்கடியை தொழில்துறையை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை வேகப்படுத்த பயன்படுத்த வேண்டுமா?

எங்கள் தொழில்துறையின் சகிப்புத்தன்மை எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அது ஜிஎஸ்டி சிக்கலாக இருக்கட்டும், தொற்றுநோயின் கேள்விக்கிடமான தேவைகள் வீழ்ச்சி அடைந்ததாக இருக்கட்டும், தேவை குறைவு அல்லது விலை மாறுபாடாக இருக்கட்டும், ஒவ்வொரு முறையும் இந்தத் துறை சந்தித்த இடர்ப்பாடுகளிலிருந்து மீண்டு வந்துள்ளது. ஆனால், சகிப்புத்தன்மையை இயலாத தன்மையாகத் தவறாகக் கருதிவிடக் கூடாது. பாதிப்புகளின் விளைவுகளைக் கருதி, நெருக்கடியான இந்த நேரத்தில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட மனப்பாங்கு, தெளிவான நோக்கம், தக்க நேரச் செயல்பாடுகளுடன், இந்தியா உடனடியாகத் தனது ஏற்றுமதியாளர்களைப் பாதுகாத்து, வலிமையுடன் எழுந்து நிற்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *