செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

Makkal Kural Official

வாஷிங்டன், டிச. 18:

அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:–

“நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக நமது நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இது முற்றிலும் சாத்தியமற்றது என்று அனைவரும் கூறிய நிலையில், இது நடந்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும். நான் அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளேன். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்தேன், காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்தேன். இதனால் 3000 ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியுள்ளேன். மேலும் உயிருடனும் பிணமாகவும் இருந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தேன்.ஏற்கெனவே, அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீட்டை நான் ஈர்த்துள்ளேன். இந்த வெற்றியின் பெரும்பகுதி வரிகளின் மூலம் சாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை – வரிகள். பல தசாப்தங்களாக மற்ற நாடுகள் நமக்கு எதிராக இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தன. ஆனால் இனி அது நடக்காது. அமெரிக்காவில் நிறுவனங்களைக் கட்டினால் வரிகள் இல்லை என்பதால், நாம் இதுவரை கண்டிராத அளவில் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக சிறப்புப் போர்வீரர் ஈவுத்தொகை வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். 1776-ல் நமது தேசம் நிறுவப்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு வீரருக்கும் 1,776 டாலர்களை (இந்திய மதிப்பின்படி ரூ. 1.60 லட்சம்) வழங்கவுள்ளோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அதிபர் டிரம்ப் இன்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இன்றிரவு நான் எதைப்பற்றி உரையாற்றுகிறேன் என்றால், நாம் குழப்பமான மரபைக் கொண்டுள்ளோம். தற்போது, நாங்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்து முடித்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா வலிமைப் பெறப் போகிறது,’ எனக் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *