வாஷிங்டன், டிச. 29:
அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன.
விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.
இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஹேமண்டன் காவல்துறைத் தலைவர் கெவின் பிரீல் கூறுகையில், காலை 11:25 மணியளவில் விமான விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சிசி டிவி கேமரா ஒன்றில் ஹெலிகாப்டர் வேகமாகச் சுழன்று தரையில் விழுவது தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்களில் பற்றிய தீயை அணைக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது.
விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள காபி கடை ஒன்றின் உரிமையாளர் கூறுகையில், அந்த விமானிகள் தங்கள் உணவகத்திற்குத் தவறாமல் வருபவர்கள் என்றும், அடிக்கடி ஒன்றாக காலை உணவு உண்பார்கள் என்றும் கூறினார். அவரும் மற்ற வாடிக்கையாளர்களும் ஹெலிகாப்டர்கள் புறப்படுவதைப் பார்த்ததாகவும், பின்னர் ஒன்று சுழன்று கீழே விழத் தொடங்கியதாகவும், அதைத் தொடர்ந்து மற்றொன்றும் விழுந்ததாகவும் அவர் கூறினார்.
ஹேமண்டன் பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், தான் ஒரு உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறும்போது ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டதாகவும், இரண்டு ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாடின்றி சுழல்வதைக் கண்டதாகவும் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்தார்.
![]()




