சென்னை, ஆக.7–
அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
இந்தியாவில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை இங்கு 6 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சைகளும், 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய இடையீட்டு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மிகநுட்பமான திறனும், அனுபவமும் தேவை. மேலும், உயர் மருத்துவக் கட்டமைப்பும் அவசியம். குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் கண்காணிப்பு வசதிகள் முக்கியம். அந்த வகையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
குழந்தைகளுக்கான இருதயவியல் சிகிச்சை நடைமுறைகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது. மருத்துவத் தொழில்நுட்பங்கள் வாயிலாக பிறப்பிலேயே வரும் பெரும்பாலான இதய குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. அதுவும், திறந்த நிலை அல்லாமல் சிறு துளைகள் மூலம் சிகிச்சையளிக்கும் வசதி வந்துவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ சிகிச்சையின் மிகவும் சிக்கலான பகுதிகளில் குழந்தைகளுக்கான இதய நோய் சிகிச்சையும் ஒன்றாகும். இந்தியாவில், ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் கிட்டத்தட்ட 8 பேர் பிறவி இதய குறைபாடுகளுடன் பிறக்கின்றனர். நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 300,000 குழந்தைகள் இதய பாதிப்புடன் பிறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, இந்த முக்கியமான சுகாதார சவாலை பன்னோக்கு சிகிச்சை அணுகுமுறையுடன் எதிர்கொண்டுள்ளது. குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் மேம்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளையும் நோய்ப் பராமரிப்பையும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை வழங்குகிறது.
அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில்,
இந்த மைல்கல் சாதனையில் அப்போலோவின் மாற்று அறுவை சிகிச்சை குழுவுடன் இணைந்து 3 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட பிறந்த குழந்தைகளுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளும், 40 இசிஎம்ஓ நடைமுறைகளும், குழந்தைகளுக்கான இதய மாற்று அறுவை சிகிச்சைகளும் அடங்கும். இந்தியாவைத் தாண்டி, ஈராக், நைஜீரியா ஆகிய நாடுகளிலும் பிற அப்போலோ கிளைகளிலும், இந்தக் குழு மேலும் 1500 அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை வெற்றிகரமாகப் பிரித்து வாழ்வளிக்கும் மருத்துவமனையாகவும் இருந்து வருகிறது. இது போன்ற மிகவும் சிக்கலான மருத்துவ நடைமுறைகளில் கொண்டிருக்கும் அப்போலோ கொண்டிருக்கும் நிபுணத்துவம், மருத்துவமனையின் குழந்தைகளுக்கான விரிவான அறுவை சிகிச்சைத் திறன்களை எடுத்துக் காட்டுகிறது என்றார்.
![]()





