செய்திகள்

அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம்

Makkal Kural Official

கெய்ரோ, அக். 12–

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் நாளை காசா அமைதி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 48 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 28 பேர் ஹமாஸ் ஆயுதக்குழுவால் கொல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய 20 பேர் உயிருடன் உள்ளனர்.

அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தியது. 2 ஆண்டுகள் நடைபெற்ற இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனிடையே, பணய கைதிகள் விடுதலை, இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி மேற்கொண்டார். அதன் பயனாக போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல், ஹமாஸ் சம்மதம் தெரிவித்தன. ஒப்பந்தப்படி காசா முனை மீதான தாக்குதலை இஸ்ரேல் நேற்று முன் தினம் நிறுத்தியது. இதையடுத்து 72 மணிநேரத்தில் இஸ்ரேலிய பணய கைதிகள் அனைவரையும் ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்ய வேண்டும். அதன்படி உயிருடன் உள்ள 20 இஸ்ரேலிய பணய கைதிகள், கொல்லப்பட்ட 28 இஸ்ரேலிய பணய கைதிகளின் சடலங்களை ஹமாஸ் ஆயுதக்குழு நாளை இஸ்ரேலிடம் ஒப்படைக்க உள்ளனர். இதற்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 2 ஆயிரத்து பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவது, காசா முனையில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். எகிப்து அதிபர் எல் சிசி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க டிரம்ப் நாளை எகிப்து செல்கிறார். இந்த கூட்டத்தில் காசாவில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. காசா அமைதி கூட்டத்திற்குப்பின் பின்னர் டிரம்ப் இஸ்ரேலுக்கும் சென்று ஹமாஸ் ஆயுதக்குழுவால் விடுதலை செய்யப்படும் பணய கைதிகள், அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார்.

முன்னதாக, காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *