சென்னை, ஜன. 3:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜே.சி.டி. பிரபாகர். இவர் 1980, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். அதிலும் 2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மறைந்த பேராசிரியர் அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அண்ணா தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், வழிகாட்டு குழு உறுப்பினராகவும், சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளராகவும் இருந்தார். அண்ணா தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற குரல் எழுப்பப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அண்ணா தி.மு.க.வை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் அணி பா.ஜ.க.வுடன் நெருக்கம் காட்டியதால், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து அவர் விலகினார். தொடர்ந்து அவர் எந்த கட்சியிலும் இணையாமல் ஒதுங்கி இருந்தார். இந்தநிலையில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் நேற்று அவர் த.வெ.க.வில் இணைந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.சி.டி. பிரபாகர் மகன் அமலன் சாம்ராஜ் பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். அவருக்கு மாநில செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜே.சி.டி பிரபாகர் பேட்டி
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை, தற்போது விஜய்யை சந்தித்தபோதும் பெற முடிந்தது. கட்சி பொறுப்பு ஏதும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் த.வெ.க.வில் இணைத்துள்ளேன். தமிழகத்தில் மக்களின் ஆதரவு விஜய்க்கு உள்ளது” என்று ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
![]()





