சென்னை, நவ. 28:
சென்னை – திருச்சி உட்பட ஆறு வழித்தடங்களில், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க, ரயில் பாதை, தானியங்கி சிக்னல் தொழில்நுட்ப தரம் உயர்த்தப்படும்’ என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயில், சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உட்பட ஆறு கோட்டங்களில் உள்ள, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, கூடுதல் பாதை அமைப்பது, ரயில் பாதை, சிக்னல் தொழில்நுட்பம் போன்றவற்றை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை சென்ட்ரல் – கூடூர்; சென்ட்ரல் – அரக்கோணம், ஜோலார்பேட்டை ; சென்ட்ரல் – ரேணிகுண்டா வழித்தடத்தில், மணிக்கு, 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை – கோவை தடத்தில், ஜோ லார்பேட்டையில் இருந்து கோவை வரை, 286 கி.மீ., துாரத்திற்கு, மணிக்கு, 145 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி நேற்று சோத னை செய்யப்பட்டது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஜோலார்பேட்டை – கோவை தடத்தில், மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை முடிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையின் தரம், சிக்னல் தொழில்நுட்பம், பயணியர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும். தெற்கு ரயில்வேயில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 2,794 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதைகள் தரம் உயர்த்தப்பட்டு, தற்போது மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அடுத்த நிதியாண்டுக்குள், எழும்பூர் – விழுப்புரம், விழுப்புரம் – விருத்தாசலம், விருத்தாசலம் – திருச்சி உட்பட ஆறு வழித்தடங்களில், 711 கி.மீ., துாரம், மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், ரயில்பாதை, தானியங்கி சிக்னல் தொழில்நுட்பம் தரம் உயர்த்தப்படும் இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயண நேரம் 30 நிமிடம் குறையும்
சென்னை – கோவை தடத்தில், தற்போது ஜோலார்பேட்டை வரை மட்டுமே, மணிக்கு, 130 கி.மீ. வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜோலார்பேட்டை – கோவை இடையே, 286 கி.மீ., துாரத்தை மூன்று மணி நேரம் 33 நிமிடங்களில் கடந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதே துாரத்தை வழக்கமாக செல்லும், கோவை விரைவு ரயில்கள், நான்கு மணிநேரம், 20 நிமிடங்களில் கடந்து விடுகின்றன. சென்னை – கோவை இடையே மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்க வாரியம் ஒப்புதல் அளிக்கும் போது, பயண நேரம் 30 நிமிடங்கள் குறையும்.
![]()





