சிவகங்கை, ஜூலை 4–
அஜித்குமார் தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றவியல் தனிப்படை போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் இச்சம்பவம் கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை பின்வருமாறு:
உடலில் 50 வெளிப்புற காயங்கள் உள்ளன. 12 சிராய்ப்பு காயங்கள், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு காயங்கள்; ‘காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல; ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக உள்ளன. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தாக்கிய அடையாளங்கள் தெளிவாக உள்ளன. பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. வயிறு நடுவே கம்பியால் குத்தப்பட்டுள்ளது. தலையில் கம்பியால் அடித்ததில் மூளையில் ரத்தக் கசிவு; மரணத்துக்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும். சிகரெட் சூட்டால் சித்தரவதை செய்யப்பட்டுள்ளது.
தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ள இந்த தகவல் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
![]()





